Thursday, November 25, 2010

பிகார் தேர்தல் - ஒரு கண்ணோட்டம்

பிகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் ஆட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட அதிகளவில் அய்க்கிய ஜனதா தளத்துக்கு இடங்கள் கிடைத்துள்ளன.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல அய்க்கிய ஜனதா தளத்தோடு கூட்டுச் சேர்ந்ததால், பா.ஜ.க.வுக்கும் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன. பா.ஜ.க.வைப் புறந்தள்ளியிருந் தால், அந்த இடங்களும் அய்க்கிய ஜனதா தளத்துக்கே கிடைத்திருக்கும்.

பிகாரில் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு தங்கள் கொள்கைக்கு மக்கள் பேராதரவு அளித்துவிட்டனர் என்று பா.ஜ.க. கூத்தாட முடியாது.

நிதிஷ்குமார் ஆட்சியில் மக்கள் பெற்ற நலன் களுக்காக, வளர்ச்சித் திட்டங்களுக்காக வாக்கு அளித்துள்ளனர். அதற்கான ஆதரவு கிடைத்திருக் கிறதே தவிர - இதில் பி.ஜே.பி.,க்கு மக்கள் ஆதரவு தந்துவிட்டனர் என்று உரிமை கொண்டாடுவதற்கு இடம் இல்லை.

(கடைசிக் கட்ட தேர்தலில் நிதிஷ்குமாருக்கு எதிராகவே அத்வானி பேசினார் என்பது கவனிக் கத்தக்கது).

இன்னும் சொல்லப்போனால் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைவர்களைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதிஷ் அழைக்கவே யில்லை. குறிப்பாக குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி பிகார் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று கறாராகவே அடித்துக் கூறிவிட்டார்.

பிகாரில் வெள்ளம் சூழ்ந்தபோது, அதனைப் பார்வையிடுவதற்காக நரேந்திர மோடி வருகிறார் என்று சொல்லி நிதிஷ்குமாரோடு - மோடியின் படத்தையும் இணைத்துச் சுவரொட்டி ஒட்டப்பட்டது என்றவுடன், உடனடியாக அவற்றை அகற்றுமாறு முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் உத்தர விட்டார். வெள்ளப் பகுதியைப் பார்வையிட எல்.கே. அத்வானி வந்தபோதுகூட அவரை வரவேற்க முதலமைச்சர் நிதிஷ்குமார் செல்லவில்லை.

கொள்கையளவில் பா.ஜ.க.வோடு எந்த வகை யிலும் ஒத்துப் போகக்கூடியவரல்லர் நிதிஷ்குமார். பிகார் மாநில அரசியல் சூழலில் அய்க்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி இருக்கிறதே தவிர, வேறு எந்த வகையான காரணமும் கிடையாது.

நிதிஷ்குமார் சாதனைக்குக் கிடைத்த வாக்கு கள் என்கிறபோது மக்கள் சாதனைகளுக்காக வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதை கணிக்க முடிகிறது. அதன் பிரதிபலிப்பை 2011 இல் தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காணலாம் - அதற்கான அறிகுறியே பிகார் தேர்தல் என்பதில் அய்யமில்லை.

இந்தத் தேர்தலில் லாலுபிரசாத் அவர்களின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், லோக் ஜனசக்தியும், காங்கிரசும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாகக் காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது. தனித்துப் போட்டியிட்டுக் குதித்து குதிகால் எலும்பு முறிந்தது தான் கண்ட பலன். உத்தரப்பிரதேசத் தேர்தலி லிருந்தாவது புத்தி கொள்முதல் கண்டிருக்க வேண்டும். அனுபவமே தலைசிறந்த ஆசான் என்பதை 125 ஆண்டுகள் வரலாறு படைத்த காங்கிரசுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே!

வடநாட்டைப் பொறுத்தவரை லாலுபிரசாத், முலாயம்சிங், நிதிஷ்குமார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஒரு மேசைமுன் அமர்ந்து பேசி நல்ல தோர் முடிவை எடுப்பார்களேயானால், அதன் அலைவீச்சு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எதிரொலிக்கும்.

சமூகநீதிக் கண்ணோட்டத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறு பான்மையினரும் இணைந்து கைகோத்து நிற்பார் களேயானால், அதுதான் உண்மையான பகுஜன் ஆகும்.

இதுபோன்ற ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றுதான் கன்ஷிராம் விரும்பினார். அவர் மறைவுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் செல்வி மாயாவதி சந்தர்ப்பவாதமாக, பார்ப்பனர் களையும் இணைத்துக் கொண்டு கொட்டிக் கவிழ்த்துவிட்டார்.

அடுத்து உத்தரப்பிரதேசத்திலும் தேர்தல் நடக்கப் போகிறது. பார்ப்பனப் பிடியிலிருந்து விலகி, கன்ஷிராம் விரும்பிய உண்மையான பகுஜனை (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்) உருவாக்குவது நல்லது!

இதன்மூலம் பா.ஜ.க.வை தம் அணியிலிருந்து நிதிஷ்குமார் வெளியேற்றவும் வசதியாகுமே!

3 comments:

  1. சபாஷ் இப்படித்தான் ஜாதிப் பெயரை சொல்லி ஊழலுக்கு ஜால்ரா அடிக்க வேண்டும்.ஏன் ஜெயலலிதா ,கருணாநிதி,லாலு யாதவ்,முலயன்சிங் யாதவ் மாயா தேவி,எடியூரப்பா எல்லோரையும் ஆதரிக்க வேண்டும்தான். அதுவும் ஜெயலலிதாவிற்கு வீரமணி அவர்கள் சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் வழங்கினார்.ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஜால்ரா அடிப்பதும் பட்டங்கள் வழங்குவதும் தெரிந்த விஷயம்தான் என்றுதான் ஜாதிப்பேரை சொல்லி ஊழலுக்கு மரியாதை செய்வது

    ReplyDelete
  2. 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை எம்.ஜி .ஆர் ஆட்சி செய்த போது எம்.ஜி.ஆரை எதிர்த்து கலைங்கரோடு இருந்தார் தமிழர் தலைவர் இருந்தார் என்பது தெரியுமா?

    அவ்வாறு இருந்ததற்கு தங்களின் பதில் என்ன?

    ReplyDelete