Showing posts with label இங்கர்சால். Show all posts
Showing posts with label இங்கர்சால். Show all posts

Monday, January 24, 2011

பகுத்தறிவு மேதை இங்கர்சால்

இந்த உலகம் கண்ட பகுத்தறிவு மேதைகள் மேற்கிலும், கிழக்கிலும் பலராவர். கிழக்கில் இந்திய மண்ணில் தந்தை பெரியாரைப் போற்றி மகிழ்வது போல் கிழக்கு வானில் தோன்றிய வெளிச்சம் போல், மேற்கில் தோன்றிய மேதை இங்கர்சால். ஆனால் ஒரு வேறுபாடு _ அய்யா தந்தை பெரியார் தேர்தல், போட்டி என்று தேர்தல் களத்தில் இறங்காமல் தொண்டாற்றி மறைந்தார். இங்கர்சால் வாழ்க்கை தேர்தல் களத்தில் தொடங்கி விரிகிறது.

1860 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் மக்கள் அவைக்கு இல்லினாய்ஸ் தொகுதியில் ராபர்ட் இங்கர்சால் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இங்கர்சாலை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டார் ரிபப்ளிக்கன் கட்சியின் வேட்பாளர் நீதிபதி கெல்லாக். நீதிபதி கெல்லாக் இங்கர்சாலை விட வயதில் மூத்தவர். இங்கர்சாலோ இளைஞர். அமெரிக்க நாட்டு ரிபப்ளிக்கன் கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். ஏற்கெனவே இருமுறை உறுப் பினராக இருந்தவர். அமெரிக்கநாட்டு விடுதலை வீரர் ஆபிரகாம் லிங்கனின் ஆதரவாளர்.

இந்த அரசியல் பெரும்புள்ளி கெல்லாக்கை எதிர்த்துப் போட்டியிடும் இங்கர்சால் இருபத்தேழு வயது நிரம்பிய இளைஞர். அப்போதுதான் அரசியல் அரிச்சுவடி கற்று வருபவர் இங்கர்சால். ஆனால், மேடையில் முழங்கிய இங்கர்சாலின் பேச்சுத் திறன் அனைவரையும் ஈர்த்தது. ஒரு கூட்டத்திற்குப் பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கூடச் செய்த முதற் பேச்சாளர் என்று புகழ் பெற்றவர், இவ் வளவு திறமையாகப் பேசியவர் அமெ ரிக்க நாட்டிலே எவரும் இருந்திலர் என்று கூறத்தக்க பேச்சாளராக விளங்கினார்.

தென்னாட்டு இங்கர்சால் என்று பேரறிஞர் அண்ணாவைப் போற்றுவது, இந்த இங்கர்சாலின் பேச்சுக்கு இணையான பேச்சு என்பதால்தான். பிறகென்ன? இங்கர்சால் வெற்றி பெற்றார். ஆனால் இவர் தாம் சார்ந் திருந்த டெமாக்ரெடிக் கட்சியை விட்டு ஆபிரகாம் லிங்கனின் ரிபப்ளிக்கன் கட்சியில் சேர்ந்தார். இதற்குக் கார ணம், மனிதரை மனிதர் அடிமை செய்வதை, மனிதருக்கு மனிதர் அநீதி விளைவிப்பதை எப்போதும் வெறுத் தும், எதிர்த்தும் வந்த இவர்தம் கொள் கையே. எனவே 1864 இல் லிங்கனுக் காகத் தேர்தல் பிரச்சார வேலைகளி லும் ராபர்ட் இங்கர்சால் முழுமூச்சாகப் பங்கு பெற்றார். மத்திய இல்லினாய்ஸ் மாவட்டத்திலுள்ள சிறிதும், பெரிது மான எல்லா ஊர்களிலும் இவருடைய சொற்பொழிவு அனைவரையும் ஈர்த்தது.

அவருக்குப்பின் தலைமை ஆளுந ராக விளங்கிய ரிச்சார்டு ஆகல்ஸ்பி என்பவர், இங்கர்சால் வழக்கறிஞர் ஆதலால் அரசுத் தலைமை வழக்கறி ஞராக 1867இல் நியமித்தார். இரண் டாண்டு காலப்பதவி. இது ஒன்றே இவர் வகித்த ஒரே ஒரு அரசுப் பதவி.

இவர் இக்காலத்தில் மதங்களை, கடவுள் கோட்பாட்டை எதிர்த்துப் பேசிவந்தவர். 1868 இல் நடை பெற்ற ரிபப்ளிகன் கட்சி மாநில மாநாட்டில் இவர் இக்கட்சிப் பிரதிநிதியாக தேர்தல் வேட்பாளராக_ முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் பாமர், இவரு டைய சமய எதிர்ப்புணர்வை, இவருக்கு எதிராகப் பயன்படுத்தி கடவுளை நிந்திப்பவர் என்று எதிர்ப்பிரசாரம் செய்து வந்தார்.

இவர் இனிமேல் மதம் தொடர்பாக, மத அமைப்புகளைக் கண்டித்துப் பேசுவதில்லை எனும் உறுதிமொழியை இவரிடம் பெற முயற்சித்தவர். ஆனால் இவரோ, அது போல வாக்குறுதி ஏதும் தரமுடியாது என்று கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டார். விளைவு _ தேர்தல் வெற்றி இவரை விட்டு நழுவி விட்டது. இதோடு இவருடைய அரசி யல் வாழ்க்கை முற்றுப் பெற்று விட்டது. ஆறு ஆண்டுக்காலம் அரசியலில் கலந்துகொள்ளவில்லை. 1876 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தம் பிரச்சார வன்மையால் ரிபப்ளிகன் கட்சி மாபெரும் வெற்றி பெறச் செய்தார்.

குடியரசுத் தலைவரிடம் இவருடைய நண்பர்கள் இவரை ஜெர்மனியில் அமெரிக்க அரசுப் பிரதிநிதியாக நியமிக்குமாறு யோசனை கூறினர். இவரிடம் அவர்கள் இதனைத் தெரிவிக்கவில்லை. இவர் அதற்குரிய அமைச்சரைச் சென்று கண்டு, தாம் அப்பதவியை ஏற்பதற்கில்லை என்றும், எந்தப் பதவியும் ஏற்கத் தமக்கு விருப்பம் கிடையாதென்றும் தெரிவித்துவிட்டார்.

தள்ளாடும் முதுமை வயது என்றாலும் இவர் தமது பொது நலப் பணியை _ அறிவியல் பிரச்சாரப் பணி யைக் கைவிடவில்லை. நாடெங்கிலும் தந்தை பெரியாரைப் போல் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். அதிக அயர்வு ஏற்பட்டால் ஓய்வு கொள்ளவும், தனது குடும்பத்தினரைக் காணவும் மட்டும் அவ்வப்போது வால்ஸ்டன் மாளிகைக்கு வருவாராம்.
உடல் நலிவுற்று இருக்கிறது ஓய்வெடுங்கள் என்று நம் ஓய்வறியாத் தலைவர் அய்யா பெரியாரிடம் சொன்ன போதெல்லாம், எப்படி, மேடையில் பேசுவது, மக்களைச் சந்திப்பது தமக்கு மருந்து என்று கூறினாரோ அது போலவே உடல் நலிவிலும் விடாமல் பிரச்சாரப் பணியைச் செய்தார். ஜென்ஸ்வில்லி என்றும் ஊரில் சொற்பொழிவு ஆற்றும்போது மயக்கம் அடைந்தவர், எப்படியோ சமாளித்துப் பேசிச் சொற்பொழிவை முடித்தார். இதன் பிறகும் சொற்பொழிவு ஆற்று வதை நிறுத்தினாரா என்றாலும் நிறுத்தவில்லை.

பகுத்தறிவுப் பிரச்சாரத்தை ஓய்வு ஒழிச்சலின்றித்தான் நடத்தினார். இடைவிடாது ஒலி பெருக்கி முன் நின்றதால் இருதய நோய், இருதய ரத்த நாளங்கள் நலிவுற்றன. ஆகவே, இனி அதிகம் பேசினால் ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடித்தனர்.

ஆனால், பொதுநலனே தன் வாழ்க்கை அலட்சியமாகக் கொண்ட இந்த அமெரிக்கப் பெரியார், என் உடல் இந்த மண்ணுலகில் இருக்கும் வரை நல்லறிவினை மக்கள் பெறச் செய்வதே, நாட்டு மக்கள் நல்லறிவும், பகுத்தறிவும் பெற்று மடமையை ஒழித்து, நல்வாழ்வு வாழச் செய்ய உழைப்பதே என்று உறுதிபூண்டார். என் வாழ்நாள் சொற்ப நாள்களே யாயினும் சரியே, அந்தச் சொற்ப நாள்களையும் பொது நலப் பணிக்கே செயல்படுத்துவேண் என்று இறங்கினார்.

தனக்கு மருத்துவம் செய்த மருத் துவரிடம் ஒரு விசித்திர உறுதி மொழி பெற்றார். தனது உடல்நிலை பற்றி வெளியில் _ குறிப்பாகத் தன் குடும்பத் தாரிடம் கூறவேண்டாம் என்று மருத் துவரிடம் உறுதிமொழி பெற்றார். எனவே, மருத்துவரும் இந்தப் பகுத்தறிவு மேதையின் விருப்பத்திற்கு இணங்கி அவருடைய நோயைப்பற்றி வெளியில் சொல்வதில்லை என்று உறுதி அளித்தார்.

1899 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாள் காலை 10.30 மணிக்கு நான் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்; தூங்கி எழுந்தவுடன் வால்ஸ்டனுடன் விளையாட வருவதாகத் தெரிவியுங்கள்! என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றவருடன் மனைவியாரும் உடன் சென்று அவர் தூங்கும் வேளையில் படுக்கை அருகிலேயே அமர்ந்திருந்தார். பன்னிரண்டேகால் மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்து நாற்காலியில் சென்று அமர்ந்தார். மனைவியுடன் பேசிக்கொண்டே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிய அவர் கண்கள் ஒரேயடியாக மூடி விட்டார்.

ஒருவர் இறந்ததும் வழக்கமாகக் கிறித்துவக் குடும்பங்களில் அழைக்கப் படும் மதத் தரகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. மோட்சம் கேட்க கொடுப்பதாகக் கடவுளுக்கு அறிமுகம் செய்து வைப்ப தாகப் புளுகிடும் எந்த வேத பாராய ணமும் நடத்தப்படவில்லை. அவரு டைய உடலை அறையில் கிடத்தி, கட வுள் கண்ணுக்கு அறிமுகம் செய்ய வில்லை.

வால்ஸ்டன் மாளிகையிலேயே அவர் உயிர் துறந்த அதே மேல் மாடி அறையிலேயே அவருடைய உடல் தூய உடையுடுத்திக் கிடத்தப்பட்டிருந்தது. 1899 ஜூலை 25 ஆம் நாள் அவருடைய நண்பர்களும், அவருடைய பகுத்தறிவுத் தோழர்களுமான 34 பேர்களும், குடும்பத்தினரும் கூடியிருந்தனர்.

பேராசிரியர் ஜான் கிளார்க் ரிவாத் என்பவர் சுதந்திரவாதியின் அறிக்கை என்பதையும், மேஜர் ஆர்லண்டோ ஜேஸ் மித் என்பவர் எனது மதம் அல்லது அறிவியலின் சிறப்பு லங்ஜாய் என்பவர் பென்சி இங்கர்சாலுக்குப் பாராட்டு என்ற உரையையும் படித் தனர். இவை அனைத்தும் இங்கர்சா லின் எழுத்தோவியங்கள். 1899 ஜூலை 27 ஆம் நாள் வியாழனன்று இங்கர்சாலின் சடல் புதைக்கப்படாமல் சுடுகாட்டில் எரி யூட்டப்பெற்றது. அவருடைய அஸ் தியை குடும்பத்தினர் திரட்டிக்கொண்டு அவர் வாழ்ந்த வால்ஸ்டன் மாளி கைக்குத் திரும்பினர்.

சித்திரப் பூ வேலைகள் செய்யப் பட்ட வெண்கலக் குடத்தில் அந்த அஸ்தி அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் குடத்தின் மீது இந்தக் குடத்தில் அவரது அஸ்தி _ எங்கள் உள்ளத்தில் அவரது நினைவு என்றும், ராபர்ட் இங்கர்சால் என்றும் பொறிக்கப்பட் டிருந்தது. அவருடைய துணைவி அமீலியா இங்கர்சால் இயற்கை எய்திய பின்னரும் இதே போல் அவருடைய அஸ்தியும் வெண்கலக் குடத்தில் வைக்கப்பட்டது.

இந்த இருவரின் அஸ்திகளும் இன்றும் அமெரிக்காவில் _ முதுபெரும் நகரான ஆர்லிங்டன் கல்லறை விடுதி யில் பளிங்குக் கற்களால் அமைக்கப் பட்ட நினைவுக் கூடத்தில் இருந்து வருகின்றன. இங்கர்சாலின் அறிவொளி நூல்கள் உலகு எங்கும் பரவியுள்ளன.

பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்


http://viduthalai.in/new/archive/1808.html